Tuesday 22 November 2011

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!



புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் வரிசையில் ஜோதிடம், பக்திக்கு அடுத்து சுயமுன்னேற்றப் புத்தகங்கள்தான் என்று ஒரு தகவல் உண்டு. அப்படி வெளிவரும் சுயமுன்னேற்றப் புத்தகங்களில் பல... நம்புங்கள்! நம்மால் முடியும்!! என்று வெற்று கோஷங்களாகவே இருக்கும். அவற்றில் நடைமுறை உதாரணங்கள் ஒன்று கூட இருக்காது. ஆனால் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடும் புத்தகம்தான் ராஷ்மி பன்சால் எழுதிய Connect The Dots என்ற ஆங்கிலப் புத்தகம். இதை புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! என்ற தலைப்பில் ரவிபிரகாஷ் மொழிபெயர்க்க விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.

ராஷ்மியின் முந்தைய புத்தகமான Stay Hungry Stay Foolish (தமிழில் 'முயற்சி திருவினையாக்கும்') 20 எம்.பி.ஏ. பட்டதாரிகளின்... அதுவும் ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களின் வெற்றிக் கதைகளைப் பற்றியதாக இருந்ததால் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. அட...! என்னதான் இருந்தாலும் அவர்களெல்லாம் ஐ.ஐ.எம்-மில் படித்தவர்கள். அதனால் அவர்களின் வெற்றி ஒன்றும் பெரிய விசயம் அல்ல என்ற நினைப்பு இருந்தது. ஆனால் இந்த பு.கோ.பாவோவில் நம்மில் பெரும்பாலோரைப் போல சாதாரணமானவர்களாக இருந்து பின்னர் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதை படிக்கும் பொழுது நம்மனதில் இந்தப் புத்தகம் பசை போல... இல்லை! இல்லை!! பெவிகால் போல ஒட்டிக் கொள்கிறது.

புத்தகத்தில் உணவகம், எலெக்ட்ரானிக்ஸ், ஃபார்மா, ட்யூசன் சென்டர், சமையல் கலை, ஆயத்த ஆடை, புத்தகக் கடை, புகைப்படக்கலை, சினிமா, விவசாயம் போன்ற இருபது பல்வேறு துறைகளில் ஜொலிப்பவர்களின் கதைகளை வறட்சியான பேட்டி சடங்காக இல்லாமல் விறுவிறுப்பான சிறுகதை போல சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் ராஷ்மி பன்சால். நமது தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்று இந்தியா முழுவதும் கோலோச்சும் விவேகானந்தா ஆங்கில பயிற்சி மையத்தின் வெற்றிக் கதையைப் படிக்கும் பொழுது நமக்குத் தோன்றும் ஒரு விசயம் காலத்தின் தேவையை முன் கூட்டியே கணித்தால்... அந்த சமயத்தில் ஒர்க் அவுட் ஆகாவிட்டாலும் பிற்காலத்தில் நிச்சயம் ஹிட்டாகும் என்பது புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால் ஆளே இல்லாத கடையில் டீ (நல்ல டீ!) ஆத்துவது போல வேலை பார்க்க வேண்டும்.

பிரபல வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கல்யாண் வர்மாவின் கதையப் படித்தால் வலைதளத்தின் சக்தி என்னவென்று நன்றாகவேத் தெரிகிறது. இவர் யாகூவில் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு வனங்களுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதில் தீவிரமாக இறங்கினார். அப்படி எடுத்த படங்களைத் தன் பிளாக்கில் ஏற்றினார். அதைப்பார்த்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இவரைத் தனது புராஜக்ட்களுக்கு நிரந்தரப் புகைப்படக் கலைஞராகப் பெரும் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனம் வேறு யாருமல்ல... உலகப் புகழ்பெற்ற பி.பி.சி.

அதே போல் ஒரிஸ்ஸாவின் பிரின்ஸ் நாடககுழுவின் நிறுவனர் 26வயதே நிரம்பிய கிருஷ்ணா ரெட்டியின் கதை ஒரு த்ரில்லர் சினிமாவிற்க்கு நிகரானது. 'கலர்ஸ்' என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய இந்திய அளவிலான ஷோவில் இந்நாடகக் குழுவும் பங்கேற்று பல்வேறு துயரங்களைக் கடந்து இறுதிச் சுற்று வரை முன்னேறியது. பரிசுத் தொகை ஐம்பது லட்சம்! யாருடைய நிகழ்ச்சிக்கு அதிக எஸ்.எம்.எஸ். ஓட்டுகள் பதிவாகிறதோ அந்தக் குழுதான் வெற்றியாளர். பிரின்ஸ் நாடகக் குழு வெற்றி பெறுவதற்காக ஒரிசா முழுவதும் எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று பிரசாரம் செய்தது யார் தெரியுமா? அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்! பிறகென்ன கிருஷ்ணா ரெட்டியின் கைகளில் ஐம்பது லட்சம் சுளையாக விழுந்தது.

இதே போல் மீதி பதினெட்டுக் கதைகளைப் படித்து முடிக்கும் பொழுது நம்மை அளவு கடந்த உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. இதனால் கிடைக்கும் நீதி என்னவெனில் நம் மனதிற்க்குப் பிடித்ததைச் செய்தால் வெற்றியும் வரும்! கூடவே நிறைய பணமும் வரும்!! பிடிக்காத வேலையிலேயே உழன்று கொண்டிருந்தால்... நாம் காலி!. ராஷ்மி பன்சால் பல்வேறு துறைகளச் சார்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்று விட்டார். மீதி அவைகளை நேர்த்தியாகப் பதிவு செய்தது. இல்லாவிட்டால் இவரது இந்தப் புத்தகம் மட்டுமே இரண்டு லட்சம் பிரதிகள் விற்றிருக்குமா...? ஒன்றைச் சொல்லாமல் விட்டு விட்டேனே...! ரவிபிரகாஷின் மொழிபெயர்ப்பு அருமை. உபரித் தகவல் :- இந்தப் புத்தகம் எட்டு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Monday 21 November 2011

WITNESS FOR THE PROSECUTION (1957) - சஸ்பென்ஸ் சினிமா



லெனார்ட் வோல் (டைரோன் பவர்), எமிலி ஃப்ரென்ச் (நார்மா வார்டென்) என்ற வயதான பணக்காரப் பெண்மணியைக் கொலை செய்துவிட்டான் என போலிஸ் அவனைக் கைது செய்கிறது. இந்த வழக்கு லண்டனின் பிரபல வழக்கறிஞர் சர் வில்ஃபிரிட் ராபர்ட்ஸிடம் (சார்லஸ் லாஃப்டன்) வருகிறது. அவர் வழக்கை எடுத்து நடத்த சம்மதிக்கிறார். கோர்ட்டில் லெனார்ட், தனக்கும் கொலையான எமிலி ஃபிரன்ச்க்கும் எப்படி பழக்கம் உண்டானது என விவரிக்கிறான். லெனார்ட் பல புதிய வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் பொருட்கள் செய்வதில் நிபுணன். அப்படி ஒரு பொருளான முட்டை கடையும் சிறு கருவியை எமிலியிடம் காட்டும் பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மற்றபடி அவரைக் கொலை செய்யும் அளவிற்கு எந்த காரணமும் இல்லை என்கிறான். ஆனால் எதிர்த்தரப்போ... எமிலி கொலை செய்யப்படுவதற்க்கு ஒரு வாரம் முன்பு எழுதிய தனது உயிலில் லெனார்டிர்க்கு எண்பதாயிரம் பவுண்டுகள் தர வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தாள்... அந்தப் பணம் தனக்கு விரைவில் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவன் அவளைக் கொலை செய்து விட்டான் எனக் கூறுகிறது. எல்லா சாட்சியங்களும் லெனார்டிர்க்கு எதிராக இருக்கிறது. ஆனால் வக்கீல் வில்ஃபிரிட் தன் திறமையான வாதங்களால் அவற்றை உடைக்கிறார்.

இந்நிலையில் எதிர்பாரதவிதமாக, லெனார்டின் மனைவி கிறிஸ்டின் ஹெல்ம் (மார்லின் டைட்ரிச்), கொலை நடந்த அன்று இரவு வீட்டிற்கு வந்த லெனார்ட் பதற்றதுடன் இருந்ததாகவும் தான் எமிலியைக் கொலை செய்துவிட்டதாகத் தன்னிடம் கூறியதாகவும் கோர்ட்டில் சாட்சி அளிக்கிறாள். இதனால் லெனார்ட் மற்றும் வக்கீல் விஃபிரிட் உட்பட அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். கிட்டத்தட்ட வழ்க்குத் தோற்றுவிடும் நிலையிலிருக்கிறது. இனி தீர்ப்பு வழங்க வேண்டியதுதான் பாக்கி. அன்று இரவு வக்கீலுக்கு ஒரு மர்ம ஃபோன் வருகிறது. எதிர்முனையில் பேசிய பெண், தன்னிடம் லெனார்டின் மனைவி கிரிஸ்டின் தன் கள்ளக் காதலனுக்கு எழுதிய கடிதங்கள் இருப்பதாகவும் நூறு பவுண்டுகள் கொடுத்தால் அவை எல்லாவற்றையும் ஒப்படைப்பதாகவும் கூறுகிறாள். வில்ஃபிரட்ஸ் நாற்பது பவுண்டுகள் விலை பேசி அவளிடம் கடிதங்களை வாங்குகிறார். அந்தக் கடிதத்தில் லெனார்டிற்கு எதிராக சாட்சி சொன்னால் அவன் சிறையிலடைக்கப்படுவான்... பிறகு நாம் ஜாலியாக இருக்கலாம் என எழுதியிருந்தாள் கிறிஸ்டின்.

மறுநாள் கோர்ட்டில்... விஃபிரட்ஸ், லெனார்டின் மனைவியிடம் கடிதங்களைக் காட்டி அவையெல்லாம் அவள் எழுதியதுதான் என உறுதி செய்கிறார். அவள் பொய் சாட்சியம் கூறியதாக நிரூபணமானதால்... லெனார்ட் விடுதலையாகிறான். பிறகுதான் இருக்கிறது அந்த செம ட்விஸ்ட்! அது உங்கள் பார்வைக்கு...

படத்துளிகள்...

பிரபல துப்பறியும் நாவல் எழுத்தாளரான அகதா கிறிஸ்டியின் சிறுகதையை சிற்சில மாற்றங்களுடன் படமாக்கிருக்கிறார் இயக்குனர் பில்லி வைல்டர். தொடர் ட்விஸ்ட்களாலும் திறமையான கோர்ட் வாதங்களாலும் நம்மை இறுதிவரைக் கட்டிப் போடுகிறார்.

படத்தின் உண்மையான கதாநாயகன் வயதான பருமனான வக்கீலாக வரும் சார்லஸ் லாஃப்டன் தான் என்றால் அது மிகையில்லை. அவருடைய கட்டைக் குரல் மிகப்பெரிய பலம்.

நார்மா வார்டெனும் அவர் மனைவியாக நடித்திருக்கும் மார்லின் டைட்ரிச்சும் கவனம் ஈர்க்கிறார்கள்.

முக்கியாமாக... வக்கீலின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளும் செவிலியாக வரும் எல்சா லான்செஸ்டருக்கு 1958ம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது கிடைத்திருக்கிறது. இதிலிருந்தே அவரது நடிப்பின் சிறப்பை நாம் உணரலாம்.

கோர்ட் காட்சிகளின் கேமராக் கோணங்களில் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ரஸ்ஸல் ஹார்லன்.

க்ளைமாக்ஸ்
1957ல் வெளிவந்த இந்தப்படம் பெரும்பாலும் வசனங்களிலேயே நகருவதால் சப்-டைட்டிலோடு பார்ப்பது உத்தமம். தவறாமல் பார்க்கவும்!

Friday 18 November 2011

என்றும் சுஜாதா



கடந்த மே மாதம் 3ம் தேதி எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு உயிர்மை பதிப்பகம் அவரது படைப்புகளில் சிலவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டது. எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். 1995 என நினைக்கின்றேன்... ஆனந்த விகடனில் சுஜாதவின் பேட்டி வெளியானது. அதில் அவரைப் பற்றிய ஒரு வரி எனக்கு சரியாக நினைவில் இல்லை.  இருந்தாலும் அது, 'சுஜாதா - தமிழில் கதை எழுதுபவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர்' என்ற வரியாக இருக்கலாம். அது எவ்வளவு உண்மை என்பதை இந்தத் தொகுப்பைப் படிக்கும் போது உணர முடிகிறது.

சங்க இலக்கியம் முதல் சயின்ஸ் வரை இசை முதல் இன்டெர்நெட் வரை எல்லாம் எழுதியிருக்கிறார். அதுவும் சிம்பொனியைப் பற்றிய கட்டுரையில் மேதாவித் தனமாக எழுதாமல் நாம் கேட்க வேண்டிய சிம்பொனியின் பட்டியல்களோடு அந்தக் கட்டுரையை முடித்திருப்பார். அதுதான் சுஜாதா! அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்பவர்கள் ஏன் இந்தியாவிற்க்குத் திரும்புவதில்லை என்ற கட்டுரை சம்பந்தப்பட்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. அதே போல் வயது வந்தவர்களுக்கு என ஆரம்பிக்கும் அறிவுரைக் கட்டுரையும் தான்.

சுஜாதவின் சிறுகதைகளும் சில இடம்பிடித்திருக்கின்றன. அவற்றில் இழையோடும் நகைச்சுவை! வயிறு புண்ணாகிவிடும். காதல் கடிதம் என்ற கதையில் கிருஷ்ண்ய்யங்கார் என்பவரைப் பற்றிய வர்ணனையில், 'அய்யங்கார் அளவில் சிறியவர். டிரான்சிஸ்டர் மாதிரி இருப்பார். உட்கார்ந்தால் நாற்காலியில் நிறைய இடம் இருக்கும்' என்று எழுதியிருப்பார். சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் 'காணிக்கை' என்ற கதையில் நம்மை அழ வைக்கிறார். அருமையான கதை!.

தமிழின் பிரபல பழைய எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் நன்று. அதிலும் தி. ஜானகிராமனைப் பற்றிய கட்டுரை சூப்பர்!. அதே போல் இளையராஜா, பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், ரஜினி, கமல் மற்றும் குறிப்பாக பாலு மகேந்திரா ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

'எதிர்காலம்' என்ற கட்டுரையில் மின் புத்தகங்களின் வரவால்... காகிதப் புத்தகங்களின் தேவை என்றுமே குறையாது என்பதைத் தகுந்த காரணங்களோடுப் பதிவு செய்துள்ளார். இதற்குப் புத்தகச் சந்தைகளில் வருடா வருடம் அதிகமாகும் விற்பனையே சாட்சி.

மொத்தத்தில் இந்த அருமையானத் தொகுப்பை ஒரே மூச்சில் படித்து முடித்து கீழே வைக்கும் பொழுது... சுஜாதா என்கிற பெரிய மாளிகையின் வாசலில் நிற்பதைப் போல் உணர்கிறேன். முழு மாளிகையையும் சுற்றிப் பார்க்க வசதியாக அவரின் அனைத்துப் படைப்புகளின் பட்டியலையும் இறுதியில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்நூல், சுஜாதா ரசிகர்களுக்கு மட்டுமல்ல... தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் நல்ல விருந்து என தைரியமாகப் பரிந்துரைக்கிறேன்.

Thursday 17 November 2011

120 கோடி - கோவிந்தா...! கோஓஓஓ...விந்தா...!!



அண்மையில் உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது. அந்த 700வது கோடி குழந்தை நமது நாட்டில் உத்திரப்பிரதேசத்தில் பிறந்ததாகக் கொண்டாடப்பட்டது. இது ஏதோ பெருமைக்குரிய நிகழ்வு எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால் எதிர்காலத்தில் உலகத்தை அழிக்கப்போவதில் பெரும்பங்கு நம் இந்தியாவிற்க்குதான் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஏனெனில் சீனா வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி, '700வது கோடி குழந்தை எங்கள் நாட்டில்தான் பிறந்திருக்கும்... ஆனால் நாங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்னரே கடைபிடித்து வரும் கடுமையான மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையினால் அது நிகழவில்லை' என கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. உண்மையில்... இந்திய நிலப்பரப்பிற்க்கும் இங்குள்ள இயற்கை வளத்திற்க்கும் உகந்த மக்கள் தொகை வெறும் 20 கோடி மட்டுமே என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.  ஆனால் இருப்பதோ 120 கோடி.

நமது தலைவர்களில் சிலருக்கு இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் ஓட்டுக்காக, 'நாம் மனித வளத்தில் முன்னணியில் உள்ள நாடு எனவும் இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் இளைஞர்கள் எனவும்' பெருமையாகக் கூறி வருகின்றனர். அவர்கள் வாரிசுகளை மட்டும் விவரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டனர். மக்கள் தொகை 20 கோடி மட்டுமிருந்தால் ஐரோப்பிய நாடுகளைப் போல் நம்மில் பெரும்பாலோர் சொந்த வீடு, கார் மற்றும் நிம்மதியான வேலை என மகிழ்ச்சியாக வாழலாம். தற்போதைய நிலைமையில் இந்திய மக்க்ள் தொகையில் 40 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்க்குக் கீழ் உள்ளனர். இது போக 120 கோடிப் பேர் வெளியிடும் கழிவுகள் (அதுவும் நம் நாட்டில் இன்றும் கூட 99 சதவீத கிராமங்களில் ஓப்பன் டாய்லெட் தான்), அதனால் பரவும் நோய்கள்... இது ஒருபக்கம். இதுபோக அத்தனை பேருக்கும் தேவையான தண்ணீர், உணவு, சொந்த வீடு மற்றும் வேலை வாய்ப்புக்கெல்லாம் எங்கே போவது ?. இரயில் நிலையம், பேருந்து நிலையம், ரேசன் கடை, திரையரங்கு,  டாஸ்மாக் (நிம்மதியா ஒரு கட்டிங் அடிக்க முடியல) என எங்கே பார்த்தாலும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு. இதனால் உண்டாகும் நேர விரயம். பிறகு எப்படி நாம் வல்லரசாவது? வாய்ப்பே இல்லை!. யாரவது 2020 என்று சொன்னால் நம்பாதீர்கள்!. ஏனெனில் 2021ல் அதாவது அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 160 கோடிப் பேர் நமது நாட்டில் இருப்பார்கள் எனப் புள்ளிவிவரங்கள் பயமுறுத்துகின்றன. அதற்க்குள் இந்த நாட்டைவிட்டுத் தப்பித்து ஓட என்னைப் போன்ற உஷார் பேர்வழிகள் சிலர் முடிவெடுத்திருக்கிறோம். நம்மால வரிசையில் மணிக்கணக்காக நிற்க முடியாதுப்பா!

பெரும் மக்கள் வளம் நம்மிடம் உள்ளது என பெருமையடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிறு மக்கள் தொகை கொண்ட நாடுகளிலுள்ள உலக வங்கி, ஐ.ம்.எஃப் போன்றவற்றில் கடன் வாங்குகிறோம். என்னவொரு முரண்பாடு?. மக்கள் தொகை அதிகமாக ஆக குற்றங்களும் அதிகரிக்கின்றன. இது வருடா வருடம் போலிஸ் வேலைக்கு ஆளெடுக்கும் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். உலகின் முன்னணி நாடுகளுக்கு இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் அவர்கள் சொல்லமலிருக்கக் காரணம் அவர்களின் பொருட்களை விற்க்கும் சந்தையாக மட்டும் நம்மைப் பார்ப்பதுதான்.  ஆகவே நன்றாக சிந்திப்பீர்! இரவு நேரங்களில் பாதுகாப்பாக செயல்படுவீர்!! ஒரு குழந்தையே போதுமப்பா!!!

Wednesday 16 November 2011

KUNDUN (1997) - அமைதியான வரலாற்று சினிமா


1933ல் திபெத்தின் மதகுருவான 13வது தலாய் லாமா இறக்கிறார். அதன் பிறகு நான்கு வருடங்களுக்குப் பிறகு திபெத்தின் தொலை தூரக் கிராமத்திலுள்ள ஒரு இரண்டு வயது சிறுவனை 14வது தலாய் லாமாவாக அந்நாட்டின் அரசன் கண்டறிகிறான்.  அச்சிறுவனுக்குப் புத்த மதச் சடங்குகளின்படி பதவியேற்பு செய்து வைக்கிறார்கள். புத்தரின் போதனைகளும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.  புத்த துறவிகள் திபெத்தில் இனி மன்னர் ஆட்சி வேண்டாமென்று முடிவெடுக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் மன்னன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தும் போகிறான்.  இனி திபெத்தைப் பொறுத்தவரை தலாய்லாமாதான் தலைவர் என முடிவாகிறது.

இப்படியொரு அமைதியான சூழலில், ஒரு பெரும் சிக்கல் சீனா வடிவத்தில் வருகிறது. சீனா, திபெத்தைச் சொந்தம் கொண்டாடுகிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி சீனப் படைகள், புத்த துறவிகளையும் பெண்களையும் கொல்கிறார்கள்...  உச்சகட்டமாக பிள்ளைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்துத் தங்கள் பெற்றோரையே சுட்டுக் கொல்ல வைக்கிறார்கள்.  தலாய் லாமா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியை நாடுகிறார்.  இது நடக்கும் காலம் 1950 என்பதால் எல்லா நாடுகளும் இரண்டாம் உலகப் போரிலிருந்து மீண்டு தங்களை மறு நிர்மாணம் செய்வதில் தீவிரமாய் இருக்கின்றன.  எனவே தலாய் லாமாவின் கோரிக்கையை யாரும் பொருட்படுத்தவில்லை.

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்ற பாணியில் தலாய் லாமா சீன அதிபர் மாவோவைச் சந்திக்கிறார்.  மாவோ சில நிபந்தனைகளை ஏற்குமாறு லாமாவை வற்புறுத்துகிறார்.  அரைமனதாக, லாமா சிலவற்றை ஏற்கிறார். ஆனால் அதன் பிறகும் சீனாவின் அக்கிரமங்கள் திபெத்தில் தொடர்கின்றன. இந்நிலையில் ஒரு நாள், சீன அதிகாரியொருவர் தலாய் லாமாவச் சந்தித்து சீன விவசாயிகள் 40000 பேரை திபெத்தில் குடியமர்த்த முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார். இதனை லாமா ஏற்க மறுக்கிறார். இதனால் கோபமுற்ற சீனா திபெத்திற்க்குத் தனது படைகளை அனுப்பத் தயாராகிறது.

தலாய் லாமாவின் ஆலோசகர்கள் அவர் உயிருக்கு சீனவால் ஆபத்து நேரலாம்... எனவே இந்தியாவிற்க்குத் தப்பித்துப் போய் விடுமாறு யோசனை கூறுகிறார்கள். தலாய் லாமா தப்பித்தாரா...? இல்லையா...? மீதி உங்கள் பார்வைக்கு.

படத்துளிகள்...
தலாய் லாமாவாக நடித்திருக்கும் டென்சின் துதோப் சரோங்கின் அமைதியான நடிப்பால் நிஜ தாலாய் லாமாவை நம் முன் கொண்டு வருகிறார்.

படத்தின் உண்மையான கதாநாயகன் ஒளிப்பதிவாளர் ரோஜர் டெகின்சும் இசையமைப்பாளர் ஃபிலிப் கிலாசும் தான். பின்னியெடுத்திருக்கிறார்கள்.

திபெத்தின் பனி மலையுச்சிகளும் புத்த விகாரங்களும் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அசத்தலோ அசத்தல்.

பின்னணி இசை... குறிப்பாக இறுதியில் தலாய் லாமா தப்பிக்கும் காட்சியில் அந்த எட்டு நிமிடங்கள் ஒலிக்கும் இசை இருக்கிறதே... ம்கூம்...! அற்புதம்!

சீனாவின் அத்துமீறலை அமைதியான மீன் தொட்டியில் சிவப்புச் சாயம் கலக்கப்படுவதான குறியீடு காட்சியிலும் தலாய் லாமா டெலெஸ்கோப்பில் பார்க்கும் காட்சியிலும் இயக்குனர் மார்டின் ஸ்கோர்ஸ் உண்மையிலேயே நம் மனதில் ஸ்கோர் செய்கிறார்.

முக்கியமாக... படத்தின் கலை இயக்குனரும் காஸ்ட்யூம் டிசைனரும் இரண்டாவது கதாநாயர்கள்.

அடிக்கடி வரும் சாமியாடி காட்சிகளும்... மதச் சடங்குகளும் சற்று போரடிக்கின்றன.

கிளைமாக்ஸ்
1997ல் வெளிவந்த இந்தப்படம் ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் போன்ற முக்கியமான விருதுகளுக்குப் பரிந்துரைக்கைப்பட்டுள்ளது. எனினும் அவ்விருதுகள் கிடைக்காதபட்சத்திலும் நம்மூர் ஃபிலிம் ஃபேர் பொல அமெரிக்காவின் பல முன்னணி விருதுகளைப் பெற்றுள்ளது. ஒளிப்பதிவு மற்றும் இசை போன்றவைகளுக்காக எதற்க்கும் பார்த்து வையுங்கள்.

Monday 14 November 2011

THE POPE'S TOILET (2007) - விறுவிறுப்பான உலக சினிமா

  
நீங்கள் ஒரு சிறிய பின்தங்கிய ஊரில் வசித்து வருகிறீர்கள். உங்கள் ஊருக்கு ஒரு நாள் போப்பாண்டவர் வருகிறார் என்றால்... எவ்வளவு பரபரப்பாகும் என்பதை ஓர் அரசியலோடு காட்டும் படம்தான் 2007ல் வெளிவந்த 'தி போப்ஸ் டாய்லெட்' என்ற ஸ்பானிஷ் மொழித் திரைப்படம்.

உருகுவே-பிரேசில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது மெலோ என்ற சிற்றூர். அங்கே வசிக்கும் மக்களில் சிலரின் தொழில்... பக்கத்து நாடான பிரேசிலிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை அதாவது மளிகை சாமான் முதல் மது பாட்டில் வரை கடத்தித் தங்களது ஊரிலுள்ள கடைகளில் கொடுப்பது. இதற்க்குக் கூலியாக அவர்களுக்கு ஒரு சிறு தொகை கிடைக்கும். அப்படி ஒரு கடத்தல்காரன்தான் பிடோ (சீசர் டிரன்கொசோ). அவனுக்குக் கார்மென் (விர்ஜினியா மெண்டெஸ்) என்ற மனைவியும் சில்வியா (விர்ஜினியா ருயிஸ்) என்ற மகளும் உள்ளனர். கடத்தல் என்றவுடன்... ஏதோ ஜீப்கள் அல்லது கார்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம். வெறும் சைக்கிலிள்தான்... அதுவும் ஸ்டாண்ட்கூட இல்லாத சைக்கிள். கடத்தலில் ஈடுபடும் போது சில நேரம் எல்லைப்பகுதியிலுள்ள சுங்கச் சாவடி அதிகாரிகள் கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான்... எல்லாப் பொருட்களும் அம்பேல்.

பிடோவிற்க்கு எப்படியாவது ஒரு மோட்டார் பைக் வாங்க வேண்டுமென்று ஆசை. அப்படி வாங்கிவிட்டால் தனது 'தொழிலை' இன்னும் சிறப்பாகச் செய்யலாம் என நினைக்கிறான். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள்... அவ்வூருக்குப் போப் இரண்டாம் ஜான் பால் வருவதாக டி.வியில் செய்தி ஒளிபரப்பாகிறது. ஊரையே உற்சாகம் பற்றிக் கொள்கிறது. சிறு வியாபாரிகள் முதல் பெரிய கடைக்காரர்கள் வரை போப் வரும் நாளன்று எப்படியும் ஆயிரக்கணக்காரர்கள் வருவதால் வியாபாரம் களை கட்டும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். பிடோவோ இந்த வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்தி பைக் வாங்கிவிடுவதில் தீவிரமாகிறான். அதன்படி ஒரு கட்டணக் கழிப்பறை கட்டினால்... போப்பைப் பார்க்க வருபவர்களில் சிலராவது அதைப் பயன்படுத்தினால்கூட கணிசமான தொகை தேறும். அது பைக் வாங்கப் போதுமானதாக இருக்கும் என முடிவெடுத்துத் தன் மனைவி மற்றும் மகளிடம் தனது திட்டத்தைக் கூறுகிறான்.


உள்ளூர் சுங்க அதிகாரியைச் சரிகட்டி கடத்தலைத் தீவிரப்படுத்துகிறான். சிறிது சிறிதாகக் கழிப்பறைக் கட்டிடம் நிறைவுபெறுகிறது. இதற்கிடையில் பிடோ சுங்க அதிகாரியுடன் ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதை அவன் மகள் பார்த்துவிட்டுத் தன் தாயிடம் கூறுகிறாள். இதனால் பிடோவிற்கும் அவன் மனைவிக்கும் சண்டை நடக்கிறது. இன்னும் கழிப்பறை சிங்க் வாங்கவில்லை. மனைவியுடனான மனஸ்தாபத்தால் அந்த அதிகாரி சொன்ன வேலையையும் செய்யாமல் வீட்டிலேயே இருக்கிறான். பொழுது விடிந்தால் போப் வந்து விடுவார். சிறிது நேரத்தில் அவன் மனைவி தன் மகளுக்காகச் சேர்த்து வைத்த பணத்தை அவன் முன்னால் வைக்கிறாள். பணத்தை எடுத்துக் கொண்டு இரவோடிரவாக சிங்க் வாங்க சைக்கிளில் புறப்படுகிறான். ஊரிலுள்ள அனைவரும் அவரவர்க்குத் தெரிந்ததை அதிக அளவில் தயாரித்து நடையோரக் கடைகளில் வைப்பதில் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்கள்.


சிங்க் வாங்கி வரும் வழியில் சைக்கிள் செயின் அறுந்துவிடுகிறது. எப்படியோ செயினை இணைத்து, சைக்கிளை விரைவாக அழுத்துகிறான். இங்கே ஊரில் அவன் மனைவியும் மகளும் கழிப்பறைக்கு வெளியே தண்ணீர், கண்ணாடி மற்றும் பிற பொருட்களுடன் பட படப்பாகக் காத்திருக்கின்றனர். பெருத்த ஆரவாரத்திற்க்கிடையே போப் வந்துவிட்ட செய்தி டி.வியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பிடோ வரும் வழியில்... எதிர்பாராதவிதமாக அந்த சுங்க அதிகாரி அவனைத் தடுத்து நிறுத்தி... சொன்ன வேலையைச் செய்யாததற்க்காக அவனது சைக்கிளைப் பறித்துக் கொள்கிறான். கழிப்பறை சிங்கைத் தோளில் சுமந்து கொண்டு ஒருவழியாக் ஊர் வந்து சேர்கிறான். சிங்கைக் கழிப்பறையில் பொருத்திவிட்டு மனைவி மகளோடு காத்திருக்கிறான். பிடோவின் ஆசை நிறைவேறியதா...? மீதி உங்கள் பார்வைக்கு.


படத்துளிகள்...
வாழ்க்கையில் நமக்கு மேல் நிலையில் இருப்பவர்கள் நம்மைச் சுலபமாக மிதித்துச் செல்வார்கள் என்பதை எவ்வித வசனமும் இல்லாமல் முதல் காட்சியிலேயே கதாநாயகன் சீசர் டிரன்கொசோவின் சைக்கிள் நிழலின் மீது மோட்டார் பைக் ஏறிச் செல்வது போலக் காட்டியிறுப்பது அற்புதம். சீசர் பைக்கில் போவது போல் கனவு காணும் போது அவனுக்குள் உண்டாகும் கிளர்ச்சியை வானத்தில் பறவைகள் பறக்கும் காட்சியோடு இணைத்திருப்பது அருமை.

சீசர் டிரன்கொசோவின் மனைவியாக விர்ஜினியா மெண்டெஸும் மகளாக விர்ஜினியா ருயிஸும் நடிக்கவில்லை... வாழ்ந்திருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் தன் தந்தை கழிப்பறையைப் பயன்படுத்துமாறு ஒவ்வொரு நபராகக் கெஞ்சும் காட்சியை டி.வியில் பார்த்துவிட்டு... விர்ஜினியா ருயிஸ் அமைதியாகக் கண்ணீர் விடும் காட்சி... நமக்கு மன உளைச்சல் உறுதி.

சீசர் சார்லோன் மற்றும் என்ரிக் ஃபெர்னாண்டஸ் என்ற இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை அவர்களில் ஒருவரான சீசர் சார்லோன் திறம்பட செய்திருக்கிறார். குறிப்பாக உருகுவே-பிரேசில் எல்லையின் பரந்த நிலப்பரப்புகளும்... அதிகாலையில் பரந்த வீதியை சீசர் கடக்கும் காட்சியும்... கவிதைகள்.

லோ பட்ஜெட் படம் என்பதால் போப் வரும் காட்சிகளை டி.வியில் காட்டியே சமாளித்திருப்பது இயக்குனர்களின் நல்ல ஐடியா!

பின்னணி இசைக்குப் பெரிதாக வேலையில்லை.

போப்பாண்டவர் வந்து சென்ற பின்பு தொலைக்காட்சியில் நிருபர் ஒருவர் இனி மெலோ ஊரிலுள்ள மக்களுக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும் எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே... சீசர் டிரன்கொஸ் ஒயின் பாட்டிலை டி.வியின் மீது வீசி எறியும் காட்சி நச் முடிவு.

க்ளைமாக்ஸ்
மே 8, 1988ல் உருகுவேவில் உள்ள மெலோ என்ற ஊரில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் என்ற டைட்டிலுடன் முடியும் இந்தப்படம் உலகளவில் சில விருதுகளை வென்றுள்ளது. சினிமா ரசிகர்க்ளுக்கு நல்ல விருந்து. மிஸ் பண்ணிடாதீங்க மக்கா...!

Wednesday 12 October 2011

THE DAY OF THE JACKAL (1973) - அரசியல் த்ரில்லர்


1960களில் ஃபிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டுக்கிடந்த அல்ஜீரியாவிற்க்கு விடுதலையளிக்கிறார் ஃபிரஞ்சு ஜனாதிபதி டி காலே. இதனால் கோபமுற்ற ஃபிரஞ்சு ராணுவ உயரதிகாரிகளில் ஒரு குழுவினர் ஒன்று சேர்ந்து ஓஏஸ் எனப்படும் தீவிரவாதக்குழுவைத் தொடங்குகிறார்கள். இவர்களின் ஒரே நோக்கம் ஜனாதிபதி டி காலே-வைக் கொல்வது தான். 1962ம் ஆண்டு ஒரு நாள் ஜனாதிபதியைச் சுட்டுக் கொல்லும் முயற்சியில் தோல்வியடைகிறார்கள். இந்தக் கொலை முயற்சி நடந்து ஆறு மாதங்களுக்குப்பிறகு அவர்களின் தலைவன் பாஸ்டியன் தியரி ராணுவத்தினரால் கொல்லப்படுகிறான். இத்துடன் ஓஏஸ்-ன் கதை முடிந்து விட்டதாக ஃபிரஞ்சு அரசாங்கம் முடிவிற்க்கு வருகிறது. ஆனால் அவர்கள் தங்கள் புதுத் தலைமையுடன் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இருந்து செயல்படுகிறார்கள்.

இனி பழைய ஃபிரஞ்சு ஆட்களை வைத்து ஜனாதிபதியைக் கொல்வது முடியாத காரியம்... எனவே கூலிக்காகக் கொலை செய்யும் வெளி நாட்டவன் ஒருவனைத் தேர்வு செய்கிறார்கள். அவன் லண்டனிலிருந்து வியன்னா சென்று ஓஏஸ் தலைவனைச் சந்த்தித்து ஜனாதிபதியைக் கொல்ல ஒப்புக் கொள்கிறான். அவனுக்கு குள்ளநரி எனப்பொருள்படும் "ஜேக்கல்" என்ற சங்கேத வார்த்தையைப் பெயராக வைக்கிறார்கள். ஜேக்கல் பலவிதமான பாஸ்போர்ட்களைத் தயார் செய்கிறான். அத்துடன் ஃபிரஞ்சு நாட்டுக் குடிமகனுக்குள்ள அனைத்துப் போலி ஆவணங்களையும் தயாரித்து ஃபிரான்சுக்குள் நுழைகிறான்.

இத்ற்கிடையில் ஃபிரஞ்சு ராணுவத்தினர் ஓஏஸ்-க்கு உதவி செய்யும் வோலன்ஸ்கி என்ற முக்கியமான நபரைக் கைது செய்கிறார்கள். அவனைச் சித்திரவதைக்குள்ளாக்கி ஓஏஸ்-ன் அடுத்த திட்டத்தை அறிய முயல்கிறார்கள். வோலன்ஸ்கியோ "ஜேக்கல்" என்ற வார்த்தையைத் தவிர வேறு எதையும் சொல்ல மறுக்கிறான். அரசாங்கம், கிலாட் லேபல் என்ற டிடெக்டிவிடம் ஜேக்கலைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறது. லேபலும் அவருக்குத் துணையாக ஓர் இளம் காவல் அதிகாரியும் இணைந்து புலன் விசாரணையில் இறங்குகிறார்கள். இத்ற்கிடையில் போலிஸ் கமிஷனர் ஒருவரை ஓஏஸ் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருத்தித் தன் வலையில் வீழ்த்துகிறாள். அவள் மூலம் போலிசின் ஒவ்வொரு அசைவும் ஜேக்கலுக்குத் தெரிய வருகிறது. அதனால் டிடெக்டிவ் லேபல், ஜேக்கலை நெருங்கும் பொழுதெல்லாம் அவன் நூலிழையில் தப்பி விடுகிறான். இத்ற்குக் காரணம் அந்த போலிஸ் கமிஷனர்தான் என லேபல் கண்டு பிடிக்கிறார். இதனால் மனமுடைந்த கமிஷனர் தற்கொலை செய்கிறார்.

ஜேக்கல், வரப்போகும் ஃபிரஞ்சு சுதந்திர தின விழா அன்று ஜனாதிபதியைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறான். தீவிர விசாரணைக்குப் பிறகு... லேபல், ஒரு மாடியிலிருந்து சுட முயற்சிக்கும் ஜேக்கலைக் கண்டுபிடித்துக் கொல்வதோடு படம் நிறைவடைகிறது.

படத்துளிகள்...

படத்தின் பிரதானப் பாத்திரங்களான... ஜேக்கலாக எட்வர்ட் ஃபாக்சும் டிடெக்டிவ் லேபலாக மைக்கேல் லௌடேலும் தூள் கிளப்பியிருப்பார்கள். அதிலும் பார்ப்பதற்க்குக் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும் மாணவன் போலிருக்கும் எட்வர்ட் ஃபாக்சின் நடிப்பு அசத்தல்.


இறுதிக் காட்சியில்... பலத்த போலிஸ் பாதுகாப்பையும் மீறி எப்படி எட்வர்ட் ஃபாக்ஸ் ஜனாதிபதியைக் கொல்லப் போகிறான் என நாம் பதற்றத்தில் இருக்கும் பொழுது... எட்வர்ட் ஃபாக்சின் அந்த கெட்டப்... செம ஐடியா!.

ஜனாதிபதியைக் கொல்வதற்க்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் துப்பாக்கி ரசனையின் உச்சகட்டம்.

படத்தில் எட்வர்ட் ஃபாக்ஸ் அறிமுகமாகும் காட்சியிலிருந்து தொடங்கும் விறுவிறுப்பு... இறுதி வரை சுருதி குறையாமல் இருக்குமாறுத் திரைக்கதையை அமைத்திருப்பார் கென்னத் ராஸ்.

தன்னைப் பற்றி லேசாக சந்தேகம் கொள்பவர்களைக் கூட இரக்கமில்லாமல் எட்வர்ட் ஃபாக்ஸ் கொல்லும்பொழுது பின்னணி இசையே இல்லாமல் மௌனமாகக் காட்டுவது திகிலை அதிகப்படுத்தும். அதேநேரம் ஜனாதிபதி தன் மாளிகையிலிருந்து புறப்படும் ஆரம்பக் காட்சியாகட்டும்... இறுதியில் நடைபெறும் ஃபிரஞ்சு சுதந்திர விழாவாகட்டும்... ஜார்ஜெஸ் டெலிரின் பின்னணி இசையே பிரதானம்.

பிரமாண்ட பாரிஸ் நகரத்து வீதிகளிலும், டாப் ஆங்கிள் ஷாட்களிலும்... பகல் மற்றும் இரவு நேரக் காட்சிகளிலும் கண்களை உறுத்தாத ஜீன் டூர்னியரின் ஒளிப்பதிவு கச்சிதம்.

நாம் சற்றும் யூகிக்க முடியாத சின்னச் சின்ன டுவிஸ்டுகளுடன்... ஒரு அருமையான அரசியல் த்ரில்லரைப் படைத்திருக்கும் இயக்குனர் ஃபிரட் சின்மேனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

என்ன...! அந்த சுதந்திர தின காட்சி மட்டும் சற்று இழு....வை.

க்ளைமாக்ஸ்

1973ல் வெளிவந்த இந்தப்படம் திறமையானதொரு நல்ல திரைப்படக்குழுவால் இன்று ரீமேக் செய்யாப்பட்டால் கூட... வசூலில் கல்லா கட்டும் என்பது மட்டும் உறுதி.  எனவே டோன்ட் மிஸ் இட்...!

Saturday 24 September 2011

THE WRONG MAN (1956) - ஹிட்ச்காக்கின் கிளாசிக்


சற்றுப் பணத்தட்டுப்பாடாக இருந்தாலும் மனதிற்க்குப் பிடித்த வேலை... மனைவி... இரண்டு குழந்தைகள் என அமைதியாகப் போகும் வாழ்க்கையில் திடீரென செய்யாத குற்றத்துக்காக உங்களுக்கு சிறைத்தண்டனை கிடைத்தால் எப்படி இருக்கும் ?. அப்படி பாதிக்கப்பட்டவனின் உண்மைக்கதைதான் 1956ல் வெளிவந்த ஹிட்ச்காக்கின் 'தி ராங்க் மேன்'.


நியூயார்க் நகரிலுள்ள ஸ்டோர்க் கிளப் எனப்படும் இரவு விடுதியில் ஃபிடில் வாசிக்கும் கலைஞனான ஹென்றி ஃபாண்டா வேலை முடிந்து அதிகாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம். மனைவி வெரா மைல்ஸ், தனக்கு விஸ்டம் டீத் (அதாவது ஞானப்பல் என நம்மூரில் கூட பல் மருத்துவர்கள் கூறுவர்) வளர்கிறது எனவும் அதைப்பிடுங்குவதற்க்கு 300 டாலர் தேவைப்படுமென கணவன் ஹென்றி ஃபாண்டாவிடம் கூறுகிறாள். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால் மனைவியின் இன்சூரன்ஸ் பாலிசியை அடமானம் வைத்துப் பணம் ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்க்கு வருகிறான் ஹென்றி. அங்கு அவனைப் பார்க்கும் பெண் ஊழியை ஒருத்தித் தன் சக ஊழியையிடம், "அவனைப் பார்... அவன் ஏற்கனவே இங்கு வந்து நம்மை மிரட்டிக் கொள்ளை அடித்தவன் போல் உள்ளான்...' என்கிறாள். அவளும் உற்றுப்பார்த்துவிட்டு அதை உறுதி செய்கிறாள். பிறகு ஹென்றியிடம் திரும்பி வந்து, "பாலிசி உங்கள் மனைவி பெயரில் இருக்கிறது... எனவே அவளை அழைத்து வாருங்கள்..." என்கிறாள். அவன் சென்றபிறகு அந்த நிறுவன மேலாளரிடம் விசயத்தைக்கூறி போலிசுக்குத் தெரிவிக்கிறார்கள்.


அன்று இரவு பணி முடிந்து அதிகாலையில் வீட்டிற்க்குத் திரும்பும் ஹென்றி ஃபாண்டாவை வீட்டிற்க்குள் நுழையும் முன்பே வாசலில் காத்திருக்கும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். அவன், அவர்களிடம் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன் என்கிறான். ஆனால் அவர்கள்... அதெல்லாம் வேண்டாம் இது வழக்கமான ஒன்றுதான்... விரைவில் திரும்பி விடலாம் என்று கூறி அவனைக் காரில் ஏற்றுகிறார்கள். பிறகு கொள்ளை நடந்த வேறு இரண்டு கடைகளில் அவனை அழைத்துச் சென்று அந்தக் கடைக்காரர்கள் முன்பு நடந்து காட்டச் சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கடைக்காரர்களோ இவன் தான் கொள்ளையடித்தான் என உறுதியாகக் கூற முடியாமல் குழ்ப்பமடைகிறார்கள். அதன் பின்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அந்த இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் முன்பு நாலைந்து குற்றவாளிகளோடு ஹென்றியையும் நிற்க வைத்து ஆளறிச் சோதனை நடத்துகிறார்கள். அவர்கள் மீண்டும் ஒரு முறை இவன் தான் என உறுதி செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக ஹென்றி ஃபாண்டாவின் கையெழுத்து அந்தக் கொள்ளையனின் கையெழுத்தோடு ஒத்துப் போகிறது. இது போதுமே...! அவன் சிறையில் அடைக்கப்படுகிறான்.

அவன் மனைவியோ தன் கணவன் வெகு நேரமாகியும் வீட்டிற்க்கு வராததால் அவளுடைய அண்ணனுக்கும் ஹென்றியின் தாயாருக்கும் தகவல் தெரிவிக்கிறாள். அவர்கள் வந்து ஒரு வழியாக அவன் கொள்ளைக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதை அறிகிறார்கள். 7500 டாலர்கள் ஜாமீன் தொகையைக் கட்டி அவனை வெளியில் எடுக்கிறார்கள். வெளிவந்தவுடன் ஹென்றி ஃபாண்டாவும் அவன் மனைவியும் வக்கீல் ஆன்டனி குவைலை சந்தித்து எப்படியாவது இந்தப் பொய் வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறுக் கேட்கிறார்கள். அவர் அந்த கொள்ளைச் சம்பவங்கள் நடந்த நாட்களில் நீங்கள் எங்கு இருந்தீர்கள் எனக் கேட்கிறார். கணவனும் மனைவியும் தாங்கள் ஒரு ஹோட்டலில் விடுமுறையைக் குடும்பத்தோடுக் கழித்ததாகச் சொல்கிறர்கள். வக்கீல், அவர்களை அந்த ஹோட்டலில் தங்கி இருந்ததற்க்கான ஆதாரம் ஏதாவது இருந்தால் எளிதாக இந்த வழக்கை முடித்து விடலாம் என்கிறார்.

அவர்களிருவரும் ஹோட்டலில் விசாரிக்கிறார்கள். ஹோட்டல் முதலாளியும் அங்கிருக்கும் பணிப்பெண்ணும், "பலர் இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர்... எங்களுக்குச் சரியாக ஞாபகமில்லை" எனக் கைவிரிக்கிறார்கள். அப்பொழுது ஹென்றி ஃபாண்டாவிற்கு அந்தக் குறிப்பிட்ட நாளில் அவர்களோடு சீட்டு விளையாடிய இரண்டு நபர்களின் ஞாபகம் வருகிறது. அவர்களைத் தேடிச் செல்கிறார்கள். ஆனால் சொல்லிவைத்தாற் போல அவர்களிருவரும் உயிரோடு இல்லை. இதனால் மனமுடைந்த வெரா மய்ல்ஸ் மனச் சிதைவு நோய்க்குள்ளாகிறாள். குடும்ப நிம்மதி சீர் குலைகிறது. அவளை ஒரு மன நலக் காப்பகத்தில் சேர்க்கிறான் ஹென்றி. வீட்டிலுள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக ஹென்றியின் தாயார் வருகிறார். அவர் மகனை கடவுளிடம் நன்றாகப் பிரர்த்தனை செய்யுமாறுக் அறிவுறுத்துகிறாள்.

இறுதியாக உண்மையான குற்றவாளி ஒரு கடையில் கொள்ளையடிக்கும்போது பிடிபடுகிறான். அவன் ஏறக்குறைய உருவத்தில் ஹென்றியைப் போலவே இருக்கிறான். இறுதியில் ஹென்றி வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறான். அதற்க்குப் பிறகும் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் அவன் மனைவி பூரண குணமடைகிறாள். பிறகு அவர்கள் குடும்பத்தொடு ஃப்ளோரிடாவில் வசிப்பதான வாசகங்களோடு படம் நிறைவடைகிறது.

படத்துளிகள்...
முதன் முதலில் போலிஸ் ஹென்றி ஃபாண்டாவை வீட்டு வாசலில் வைத்து விசாரணைக்காகக் காரில் ஏற்றும் பொழுது வீட்டு சமையலறை ஜன்னலில் தெரியும் வெரா மைல்சின் நிழல்... நம் மனதைப் பிசையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவனைக் காரில் ஏற்றிய பின், அருகிலிருக்கும் போலீஸ் ஒருவர் சுருட்டைப் பற்ற வைப்பார். இனி உனது வாழ்வில் நெருப்பு பற்றிவிட்டது என்பதன் குறியீடு அந்தக் காட்சி.

சிறைச்சாலையில் அடைக்கும் முன் முதன் முறை குற்றம் செய்து கைதானவர்களுக்கான நடைமுறையான கைரேகையைப் பதிந்து எடுத்த பின்... ஹென்றி, கறுப்பு மை படர்ந்துள்ள தன் உள்ளங்கைகளைப் பார்ப்பது... ஒரே இரவில் அவன் வாழ்க்கை கறுமையடைந்துவிட்டது என்பதைக் காட்டும் அருமையானதொரு காட்சி.

ஹென்றி தனது வாழ்க்கைப் பின்னணியை வக்கீலின் உதவியாளரிடம் சொல்லும் பொழுது அவ்வுதவியாளர் எழுதும் காகிதத்தின் மீது ஓடுகின்ற இரயிலின் நிழலைக் காட்டுவது கவிதை.

சிறையில் ஹென்றியை அடைத்து விட்டுக் கதவை மூடியபின் அக்கதவிலுள்ள சிறு ஜன்னலின் வழியாக அவன் முகத்தை மட்டும் காட்டும் குளோசப் காட்சி அசத்தல்.

இறுதிக் காட்சியில் உண்மையானக் குற்றவாளியைப்பார்த்து ஹென்றி பேசும் அந்த ஒற்றை வசனம் ஃபன்டாஸ்டிக் (நம்மூர்ப் படங்களாக இருந்தால் வசனம் பேசியே கொன்றிருப்பார்கள்...)

எந்தத் தவறும் செய்யாதவன் போலிசிடம் சிக்கினால் ஏற்படும் மனவேதனையைக் கண்களிலேயே வெளிப்படுத்தும் ஹென்றி ஃபாண்டா, கலகலப்பான குடும்பத் தலைவியாகவும் மன நிலை பாதிக்கப்பட்டவராகவும் அசத்தியிருக்கும் வெரா மைல்ஸ், சீரியசாக இல்லாமல் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வழக்கை நடத்தும் வக்கீல் ஆண்டனி குவைல் ஆகியோரின் நடிப்பு இப்படத்திற்க்கு வேறு நடிகர்களை யோசிப்பதற்க்கு இடம் தராமல் செய்கிறது.

இது கறுப்பு-வெள்ளைப்படம் என்பதையே மறக்கச் செய்யும் ராபர்ட் பர்க்சின் ஒளிப்பதிவு... காட்சிக்குக் காட்சி பதற்றத்தை அதிகரிக்கும் பெர்னார்ட் ஹெர்மேனின் பின்னணி இசை போன்றவை படத்திற்க்கு மிகப் பெரிய பலம்.

க்ளைமாக்ஸ்
வணிக ரீதியாகத் தோல்வியடைந்தாலும் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் இந்த க்ளாசிக் படம் பார்த்து முடித்த பிறகும் நம் மனதை விட்டு அகல சில நாட்களாகிறது. சினிமா ஆர்வலர்கள் மட்டுமல்ல... அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய அற்புதமான படம்.

Monday 19 September 2011

பணம் அண்டர்கிரவுண்ட் வரை பாயும்


1952ல் வெளிவந்த 'பராசக்தி' படத்தில் வரும் "தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி..." என்று தொடங்கும் பாடலிலுள்ள ஒவ்வொரு வரிகளும் இப்பொழுதும் எவ்வளவு உயிரோட்டத்தோடு இருகின்றது என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது. எடுத்துக்காட்டாக சில வரிகள் மட்டும்...

நல்லவரானாலும் 'இல்லாதவரை' நாடு மதிக்காது...
(நிகழ்காலம் :- உறவினர் நிகழ்ச்சிகளில் அளிக்கப்படும் வரவேற்பு வித்தியாசங்கள்)

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளிப்பணம் அடியே...
(நிகழ்காலம் :- ஒரு மயி.....க்கும் லாயக்கில்லாத பணம் படைத்த கல்வித்தந்தைகள் விழாக்களில் புகழப்படுதல்)

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே...
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே...
(நிகழ்காலம் :- பணம் கைக்கு வரும் வரை பொறுமை காத்துப் பின் அது வந்த பிறகு தனது வஞ்சகத்தை வெளிப்படுத்தும் பலர்)

சில முட்டாப் பயல எல்லாம் தாண்டவக்கோனே...
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே...
(நிகழ்காலம் :- இது பல நிறுவனங்களில் இன்று மட்டுமல்ல... என்றும் காணலாம்)

கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே...
பிணத்தைக்கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே...
பணப் பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே...
(நிகழ்காலம் :- சொத்துக்குரியவர் இறந்து விட்டால் அவரை அடக்கம் செய்வதற்கு முன்பே அவரது வாரிசுகள் போடும் கேவலமான சண்டைகள்)

இதைவிட உச்சகட்டமாகப் பெற்றோரே தன் மகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது மற்றும் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காகக் கடத்தப்படுவது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது பணத்தின் வீரியம் நம் முகத்தில் அறையும்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... "வாழ்க்கைக்குப் பணம் முக்கியமல்ல... அன்புதான் முக்கியம்", என்று கோடி கோடியாய்த் தங்க்கக்கட்டிகளையும் பணத்தையும் குவித்து வைத்துக் கொண்டு குஷன் சிம்மாசனத்தில் அமர்ந்து போஸ் கொடுக்கும் போலிச் சாமியார்களின் வெற்று உபதேசங்களை நம்பாதீர்...!

அக்கால 'பராசக்தி' முதல் இன்றைய 'வானம்' வரை சொல்லும் செய்தி இதுதான்... "பணம்... பணம்... பணம்... அது இல்லையினா பொணம்..."

Monday 12 September 2011

முதல் மரியாதை


என்னை எழுதத் தூண்டிய... என்றும் எனது வணக்கத்திற்குரிய - பெரியார், சுஜாதா, வைரமுத்து ஆகியோருக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!

அன்னா ஹசாரேவும் மெழுகுவர்த்தி விற்பனையும்

அண்மையில் நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்திய என்று ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் சில கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுப்பதாகக் கூறியதால் கைவிடப்பட்டது. ஊழல் ஒழிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. இதுமாதிரியான போரட்டங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற உண்மையான ஜனநாயகம் இருக்கும் நாடுகளில் வேண்டுமானால் எடுபடும். உதாரணத்திற்க்கு மோனிகா லெவின்ஸ்கி என்ற சப்பை மேட்டருக்காக உலகின் பெரும்பாலான நாடுகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பவர்ஃபுல்லான அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனை கூண்டில் ஏற்றினார்கள். ஆனால் இந்தியா போன்ற போலி ஜனநாயகம் உள்ள நாட்டில் இதெல்லாம் வெறும் உணர்ச்சியைத்தூண்டும் வேலையன்றி வேறொன்றுமில்லை.

மேலும் பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் எண்ணிலடங்கா ஜாதிகள் உள்ள நாட்டில் மக்களை எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும் ? வாய்ப்பே இல்லை...! அப்படி ஒருங்கிணைக்க முடிந்திருந்தால் இலங்கையில் வழிந்தோடிய குருதியை தடுத்து நிறுத்தி இருக்கலாமே...! நமது நாட்டைப்பொறுத்தவரை அரசியல்வாதிகள் எப்பொழுதுமே ஒரு பாதுகப்பான வளையத்தில் இருப்பர்கள். அந்த வளையத்திற்குள் யாராவது நுழைய முற்பட்டால் பாபா ராம்தேவுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். அந்தக்கால போஃபர்ஸ் முதல் இந்தக்கால் காமன்வெல்த் வரை இதுதான் நிதர்சனம். சரி ! ஊழலை ஒழிக்க வேறு என்னதான் வழி ? திருடனாய்ப்பாத்து திருந்தாவிட்டல் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள்தான் எனக்குத்தெரிந்த ஒரே வழி !

அன்னாவின் போராட்டத்தால் மெழுகுவர்த்தி விற்பனை வேண்டுமானால் அதிகரிக்கலாம். மற்றபடி வடிவேலு பாணியில் போய் பிள்ளைகளைப் படிக்க வைங்கைய்யா... சும்மா கப்பித்தனமாப் பேசிக்கிட்டு...