Wednesday 20 September 2017

மய்யழிக் கரையோரம்




கேரளாவில் கோழிக்கோடு, கண்ணனூர் ஆகிய மாவட்டங்களுக்கு நடுவே வெறும் ஒன்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே உள்ள சிறிய ஊர் மய்யழி (மாஹி).  இவ்வூரைப் பின்னணியாகக் கொண்டு எம். முகுந்தன் எழுதிய நாவல்தான் மய்யழிக் கரையோரம்.
நாவல் சிற்பம்
மாஹியில் உள்ள அரசு நிர்வாக கட்டிட அலுவலகத்தின் ஆறடி உயரமுள்ள சுற்றுச்சுவரில் சுமார் நூறடி நீளத்திற்கு இந்நாவலின் 30 முக்கிய நிகழ்வுகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் சிற்பமாக அரசாங்கமே செய்து வைத்துள்ளது என்ற செய்தியைப் படித்த  பொழுது, அப்படி என்னதான் இருக்கிறது என ஆர்வம் மேலிட இந்நூலை இணையத்தில் தேட, அதன் தமிழ் மொழிபெயர்ப்பை என்பிடி (NBT) சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளது தெரிய வந்தது.  நம்மவர்களின் இலக்கிய ஆர்வம் நன்றாகத் தெரியுமென்பதால், இந்நூல் கண்டிப்பாக விற்று முடிந்திருக்காது என்கிற நம்பிக்கையில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் என்பிடி அரங்கில் சீந்துவாரின்றிக் கிடந்த பிரதிகளில் ஒன்றை வாங்கினேன்.
குறம்பியம்மா என்ற வயதான பெண்மணியின் நினைவலைகளில் ஆரம்பிக்கும் நாவல், அவளது பேரன் தாசன் (கதையின் நாயகன்) பிறந்து, பள்ளி பயின்று, இளைஞனாவது வரையிலான கால கட்டத்தை மய்யழியின் புவியியல் பின்புலத்தோடு ஓர் அற்புத எழுத்தோவியமாக செதுக்கியுள்ளார் முகுந்தன்.

பிரெஞ்சு ஆதிக்கத்தோடு ஆரம்பிக்கும் கதை, மய்யழியின் விடுதலையோடு முடிகிறது.  இதற்கிடையில் நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உலவுகின்றன.  ஆனால் அவை நம் நினைவை விட்டு நீங்காவண்ணம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு சின்ன சம்பவத்தைப் புதைத்து வைத்துப் படைத்துள்ளார் நூலாசிரியர்.

குறம்பியம்மாவின் மகனான அதிகம் படிக்காத தாமு, மாஹியில் உள்ள கோர்ட்டில் ரைட்டராகப் பணிபுரிகிறார்.  அவரது மகன் தாசன் நன்றாகப் படிப்பதால், அவ்வூரின் மேயர் அவனை மேல்படிப்பிற்காகப் பாண்டிச்சேரி அனுப்புகிறார்.  திரும்பி வரும் அவன் முன்னால், பிரான்ஸிற்கு மேற்கொண்டு படிக்க செல்வது அல்லது மாஹியின் செகரடேரியட்டில் அரசாங்கப் பணியில் சேர்வது என இரண்டு தேர்வுகள் உள்ளன.  இதற்கிடையில்  கம்யூனிச சிந்தாந்தத்தில் ஊறிப் போகும் தாசன், பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவு தனக்குத் தேவையில்லை என முடிவெடுத்து மய்யழியின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறுகிறான்.  மகன் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்ற கனவு பொய்த்துப் போக தாமு, தாசனை வீட்டை விட்டு துரத்துகிறார்.  சந்திரிகா என்ற பெண்ணுடன் தாசன் காதல் கொள்கிறான்.  உருப்படியான வேலை இல்லாததால், தாசனுக்கு சந்தரிகாவின் அப்பா பெண் தர மறுக்கிறார்.  வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டு போன பிறகு, சந்திரிகா காணாமல் போகிறாள்.  எங்கு தேடியும் கிடைக்கவில்லை!  தாசனுக்குத் தெரியும், அவள் இனி கிடைக்கப் போவதில்லை என்று.  முடிவில் மாஹி விடுதலை பெற்ற பிறகும், எந்த வேலையிலும் நாட்டம் செல்லாமல் வாழ்க்கையை வெறுத்த நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் தாசன் என்னவாகிறான் என்பதோடு கதை முடிகிறது.

இந்நாவலில் நம்மை ஒன்ற வைக்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.  மின்சார விளக்குகள் இல்லாததால் எண்ணெய் ஊற்றி ஒளிர விடப்படும் தெரு விளக்குகள், கள்ளுக்கடை, மூடநம்பிக்கைதான் என்றாலும் குறம்பியம்மா தன் பேரனுக்குச் சொல்லம் சுவாரஸ்யமான கதைகள், இரயில் நிலையம், பாலம், மய்யழியின் பருவகால மாற்றங்கள், குஞ்ஞிச்சிறுதை எனும் வேசியின் பாத்திரப்படைப்பு, தெரு விளக்கேற்றும் கான்டிராக்ட் பெறும் முதலாளி அதில் செய்யும் ஏமாற்று வேலை, பிரெஞ்சு அதிகாரிகளின் குதிரை வண்டிகள், கடலையொட்டிய மேயரின் பங்களா, தேவாலயம் என ஒரு விஸ்தாரமான உலகை நம் மனதில் உருவாக்கும் சிறந்த படைப்பு.

நாவலைப் படித்து முடித்தவுடன் மாஹி சென்று, நாவலின் கதாபாத்திரங்கள் உலவிய பகுதிகளில் நாமும் நடமாட வேண்டும் என்ற உந்துதலைத் தவிர்க்க முடியவில்லை.

என்னதான் அறுசுவை விருந்து படைத்தாலும், அதில் நரகலை எடுத்து வைத்தது போல ஒரு சிறிய பத்தி நம்மைக்  காயப்படுத்துகிறது.  பெரும்பாலான மலையாளப் படைப்பாளிகளுக்கே உரிய கெட்ட குணம் அது.
“அந்தக் காலத்தில் மய்யழியில் போலீஸ்காரர்களில் பெரும்பகுதியினர் பாண்டிச்சேரியிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் வந்த தமிழர்களாயிருந்தார்கள்.  அவர்கள் பொதுவாக மடையர்களாவும் மண்டை காய்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.  பொழுது புலரும்போதே குடிக்கப் போய்விடுவார்கள்.  பாட்டுப் பாடியும் பெண்கள் பின்னே சுற்றித் திரிந்தும் நேரத்தைக் கொல்வார்கள்“. (பக்.-81)

எந்த சித்தாந்தமாக இருந்தாலும் ஓரளவிற்கு மேல் உள்வாங்கினால், இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற செய்தியை தாசன் கதாபத்திரம் மூலம் மறைமுகமாக சொல்கிறது இந்நாவல்.  அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  மொழிபெயர்ப்பு நன்றாகவே இருக்கிறது.

வெளியீடு - என்பிடி (NBT)
பக்கங்கள் 267
விலை    - ரூ.48/-

Monday 28 August 2017

ரத்தம் ஒரே நிறம்


தமிழின் 100 சிறந்த நாவல்களில் ஒன்றாக எஸ்.ரா மற்றும் ஜெயமோகன் ஆகியோரால் குறிப்பிடப்படும் சுஜாதாவின் ஒரே நாவல் ரத்தம் ஒரே நிறம்.  நீண்ட நாட்களாக வாங்கிப் படிக்க வேண்டும் என நினைத்த இந்நாவல் அண்மையில் நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவில் உயிர்மை அரங்கில் கிடைக்கவில்லை.  ஸ்டாக் முடிந்து விட்டது என்றார்கள்.  ஒரு வழியாக ஆன்லைன் புத்தகக் கடையிலிருந்து வாங்கிவிட்டேன்.

பல்வேறு பணிகளுக்கிடையே இரண்டு நாட்களில் முந்நூற்றி சொச்சம் பக்கங்கள் உள்ள இந்த நாவலை ஒரே வீச்சில் படித்து முடித்து விட்டேன்.  இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் இன்றளவும் தவறுதலாக முதல் இந்திய சுதந்திரப் போர் என குறிப்பிடப்படும் 1857-ல் நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்.


கர்னல் நீல், ஆஷ்லி, மக்கின்சி, அவன் மனைவி எமிலி என ஆங்கிலேயத் தரப்பு ஒரு புறம்.  முத்துக்குமரன், அவன் காதலி பூஞ்சோலை, பைராகி சாமியார் மற்றும் சில சின்ன கதாபாத்திரங்கள் என தமிழர் தரப்பு மறு புறம்.  இவர்களுக்கிடையே சிப்பாய்க் கலகத்தை சான்ட்விச் போல திணித்து சுவையாக வழங்கியுள்ளார் சுஜாதா.

ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் முததுக்குமரனின் தந்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரி மக்கின்சியால் கொல்லப்பட, அதற்குப் பழி தீர்க்கப் புறப்படும் முத்துக்குமரன் மக்கின்சியைக் கொன்றானா? இல்லையா? என்ற கேள்விக்கான விடை தான் இந்நாவல்.  சுஜாதா தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் நாவலில் குறிப்பிடப்படும் பல்வேறு சம்பவங்கள் உண்மையானவை.  இதில் முத்துக்குமரன் என்கிற தமிழனின் கதையைக் கலந்தது மட்டும் தான் சுஜாதாவின் கற்பனை.
நானா சாகிப்
 நானா சாகிப், தாந்தியா தோபே ஆகியோர் பற்றிய சரித்திர விபரங்கள், வெள்ளைக்கார அதிகாரிகள் வசிக்கும் மாளிகைகள், அவர்களது பழக்க வழக்கங்கள், அன்றைய சென்னையின் நகர அமைப்பு, கல்கத்தா துறைமுகம், கான்பூர் போர்க் காட்சிகள், கழைக் கூத்தாடிகளின் வாழ்வியல், குதிரைகள், பறவைகள், வாள், கத்தி, பீரங்கி, என்பீல்ட் ரக துப்பாக்கிகள், ராணுவ நடைமுறைகள், மது வகைகள், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.  அவ்வளவு தகவல்கள்! இப்புத்தகத்தின் அணிந்துரையில் ரா.கி. ரங்கராஜன் குறிப்பிட்டது போல், “கூடை நிறைய உள்ள தகவல்களை சுஜாதா காப்ஸ்யூல் வடிவில் கொடுத்திருக்கிறார்.  துணை நூற் பட்டியலில் பல ஆங்கிலப் புத்தகங்களுக்கிடையில் அபிதான சிந்தாமணியை குறிப்புக்கு எடுத்துள்ளதிலிருந்தே தெரிகிறது சுஜாதாவின் அசுர உழைப்பு.

இந்நாவலில் என்னை ஈர்த்த கதாபாத்திரம் பைராகி சாமியார் தான்.  செமி நாத்திகவாதியான சுஜாதா, இக்கதாபாத்திரத்தின் மந்திர தந்திர வித்தைகளை பகடியுடனும் வெகு சுவாரஸ்யத்துடனும் எழுதியுள்ளார்.

இதில் ஆண் பெண் உடலுறவுக் காட்சிகள் அதிகம் வர்ணிக்கப்படுவது, சில இடங்களில் மதராஸ் என்பதற்குப் பதிலாக கதாபாத்திரங்கள் சென்னை என பேசுவது உள்ளிட்ட சிலவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் என சம்பிராதாயமாகக் கூறினாலும், இது வழக்கமான வரலாற்று நாவல் அல்ல.  ஏனெனில், தமிழ்ப்  படைப்புலகத்தின் ஆல் ரவுண்டரான சுஜாதாவின் மொழிநடை வரலாற்றை விட வசீகரமானது.  இந்நூலை வேறு யார் எழுதினாலும் ஒரே வீச்சில் வாசிக்க இயலாது.  அது தான் சுஜாதாவின் வெற்றி!

வெளியீடு :- உயிர்மை
பக்கங்கள் :- 342

விலை    :- 300/-

Wednesday 10 May 2017

தாழப் பறக்காத பரத்தையர் கொடி


பிரபஞ்சன் 2008-2009 ஆண்டுகளில் எழுதிய 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  குமுதம் வார இதழில் பணியாற்றியது, சங்க இலக்கியம், புதுச்சேரி (பாண்டிச்சேரி என்பது தவறான வழக்கு என்கிறார்) நினைவுகள், நூல் அறிமுகங்கள், மேன்ஷன் வாழ்க்கை, மதுப்பழக்கம், உலகத் தமிழ் மாநாடு கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தனது தெள்ளிய நடையில் விவரித்துள்ளார்.

குமுதம் அலுவலகத்தின் அன்றாடப் பணிகள் ஒரு குருகுலம் போல் பகவத் கீதை, திருக்குறள் என தொடங்கி, வழிபாடு முடிந்த பின்னர்... இதழில் இடம்பெறப் போகும் சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்களைத் தேர்வு செய்வது என்ற முரண்பாட்டை நகைச்சுவை கலந்து பதிவு செய்துள்ளார்.

மேன்ஷன் அறைகள், சவப்பெட்டி போன்றவை“ என்ற ஒற்றை வரியில் மேன்ஷன்களின் சித்திரத்தை சுரீரென்று மனதில் பதிய வைக்கிறார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் ஒரு வார காலம் தங்கிய அனுபவம் உள்ளதால், அந்த அவஸ்தை எனக்கு நன்றாகப் புரிந்தது.

பிரபஞ்சனின் தங்கை மற்றும் தம்பி ஆகியோருடனான சிறு வயது விளையாட்டுகள்... ஒரு கோடை விடுமுறையில் அவர்களிருவரும் அம்மை தாக்கி இறந்து போனது என மனதை உருக்கும் “பானு உன் புத்தகப் பை அண்ணனிடம் இருக்கிறது என்ற கட்டுரை நெகிழ்ச்சியானது.

புதுச்சேரியின் மதுப்பழக்கம் பற்றிய கட்டுரையில், மதுவைக்  குடிப்பதற்கும் அதை அருந்துவதற்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை பிரெஞ்சுப் பண்பாட்டின் பின்னணியில் சுவையாக விளக்குகிறார்.  ஒரு முறை மராத்தியர்கள் ரகோஜி போஸ்லே தலைமையில் புதுச்சேரியை முற்றுகையிட்டு யுத்தத்திற்கு அழைப்பு விடுக்க, அப்போது புதுச்சேரியின் கவர்னராக இருந்த துய்மா என்பவன், மராத்தியத் தூதுவனிடம் “யுத்தத்திற்கு தயார்! என பதில் கடிதம் கொடுத்து, கூடவே பத்து ஐரோப்பிய மது பாட்டில்களையும் வைத்து அனுப்பி வைக்கிறான்.  அந்த மதுவை ரகோஜி தனது மனைவியுடன் பகிர, அதன் சுவையில் மயங்கிய அவள் அனைத்து பாட்டில்களையும் குடித்து முடித்துவிட்டு, இன்னும் வேண்டும் என்கிறாள்.  ரகோஜி, பேரழகியான தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற, எதிரியான துய்மாவிடம் யுத்தத்தை மறந்து, முப்பது பாட்டில்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டான்.  பிறகென்ன... யுத்தம் கைவிடப்பட்டது.  பிரபஞ்சன் இதை விவரித்துவிட்டு இறுதியில் எழுதுகிறார்... “யுத்தங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள்.  பாட்டில்கள் தீர்த்து வைக்கின்றன”.  இதுதான் பிரபஞ்சன் டிரேட்மார்க்.  புதுச்சேரியின் கள்ளுக்கடைகள், பார்கள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன...  தமிழ்நாடு போல கண்றாவியாக இருப்பதில்லை என்கிறார்.  ஆனால், தற்போது புதுச்சேரியும் தமிழ்நாட்டைப் போல் குடியால் சீரழிகிறது என நேர்மையாகக் கட்டுரையை முடிக்கிறார்.  இக்கட்டுரையை வாசிக்கும்பொழுது ஒரு தரமான ஒயினை மிடறு மிடறாக அனுபவித்துக் குடிப்பதைப் போன்ற மகிழ்ச்சியைத் தருவதுதான் பிரபஞ்சனின் எழுத்தாற்றல்.

இந்தப் புத்தகத்தில் அதிர்ச்சி தரும் கட்டுரை, பாவை பப்ளிகேஷன் என்ற பதிப்பகம் பிரபஞ்சனின் அனுமதியில்லாமல் அவரது நாடகம் உட்பட ஐந்து படைப்பாளிகளின் நாடகங்களை அவர்களது அனுமதியில்லாமல் ஒரே தொகுப்பாக வெளியிட்டு விட்டது.  அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகம்!  அப்பதிப்பகத்தின் கௌரவ தலைவரின் தலைமையில் ராயல்டிக்காகக் கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது... பிரபஞ்சன் அந்தத் தலைவரை நோக்கிக் கடுமையாகப் பேசுகிறார்.  ஆனால், அவரோ பதிப்பகத்தாருக்கு சாதகமாகப் பேசுகிறார்.  சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு, விருப்பமே இல்லாமல் ராயல்டி வழங்கப்படுகிறது.  அந்தத் தலைவர் வேறு யாருமல்ல... நேர்மையின் உருவமாகக் கருதப்படும் நல்லகண்ணு! அவரின் பிம்பத்தில் விழுந்த மிகப்பெரிய ஓட்டை!!

இந்நூலின் தலைப்பைக் கொண்ட பரத்தையரின் வாழ்வை சமூகப் பார்வையோடு அலசும் ஆழமான கட்டுரை இறுதியாக இடம்பெறுகிறது.  “காற்றின் திசைகளில் பரத்தையர் ஏற்றிய கொடி எப்போதும் தாழப் பறப்பதில்லை என்று அக்கட்டுரையை முடிகிறது.  பிரபஞ்சன் எழுத்துலகிற்கு வந்து 55 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் இந்நேரத்தில், தமிழ் இலக்கிய வரலாற்றில் அவர் இயற்றிய படைப்புகளும் ஒருபோதும் தாழப் பறப்பதில்லை.  சிறந்த கட்டுரைத் தொகுப்பு!

வெளியீடு :- உயிர்மை
பக்கங்கள் :- 143
விலை    :- ரூ.85/-

Sunday 23 April 2017

அமெரிக்காவின் மறுபக்கம்


ஐ.டி என்றில்லை... பெரும்பாலான தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களின் கனவு தேசம் எதுவென்றால்...? அது அமெரிக்காதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.   கவர்ச்சி நிறைந்த அந்த நாட்டின் நிறை குறைகளை அலசும் புத்தகம்தான் நாகேஸ்வரி அண்ணாமலை எழுதியுள்ள அமெரிக்காவின் மறுபக்கம்.  இந்நூலை இவர் தமிழ்நாட்டிலிருந்து எழுதியிருந்தால் அதன் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டிருக்கும்.  ஆனால் அவர் அமெரிக்காவில் ஐந்து வருடங்கள் தன் மகள் வீட்டில் வசித்து பல்வேறு புத்தகங்களை ஆய்வு செய்தும் நேரில் களப்பணியாற்றியும் எழுதியுள்ளதால் தகவல்கள் பெரும்பாலும் உண்மையாகவே இருக்க வாய்ப்புள்ளது.

Friday 21 April 2017

சோலை எனும் வாழிடம்



தமிழில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் எழுத்துகளின் முன்னோடியான தியடோர் பாஸ்கரன் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் மற்றும் அவரது ஒரு நேர்காணல் ஆகியவற்றின் தொகுப்பு “சோலை எனும் வாழிடம்என்ற புத்தகமாக வந்துள்ளது.

Monday 13 March 2017

உப்பு வேலி


இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட மாபெரும் சுங்கப் புதர்வேலியின் ஒரு சிறிய பகுதியைக் கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்த ராய் மாக்ஸம் என்ற வெள்ளைக்காரரின் பயணம் தான் உப்பு வேலி என்ற இந்தப் புத்தகம்.  ராய் மாக்ஸம் ஆங்கிலத்தில் எழுதிய The Great Hedge of India என்ற புத்தகத்தை சிறில் அலெக்ஸ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

Thursday 2 March 2017

பின்நகர்ந்த காலம்


வாசிப்பில் ஆர்வமுள்ள எல்லோரையும் போல பலரின் பரிந்துரையில் கடல்புரத்தில் நாவலையும் எஸ்தர் சிறுகதையையும் வாசித்த பின்பு தான் வண்ணநிலவன் எனக்கு அறிமுகமானார்.  1970 முதல் 1980 வரை அவருடைய வாழ்க்கை அனுபவங்களை பின்நகர்ந்த காலம் என்ற இந்ந நூலில் விவரித்துள்ளார்.

Sunday 26 February 2017

கடைசிக் கோடு


அரசுப் பணியின் பொருட்டு, நில அளவைப் பயிற்சிக்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு தமிழ்நாடு நில அளவைப் பயிற்சி நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 35 நாட்கள் பயிற்சி தரப்பட்டது.  அங்கு பாடம் நடத்திய ஆசிரியர்களில் திரு.சந்திரசேகர் என்ற ஓய்வு பெற்ற நில அளவை ஆய்வாளரைத் தவிர மற்ற அனைவரும் கடனே! என பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.  திரு.சந்திரசேகர் இந்தியாவை வெள்ளையர்கள் எவ்வாறு நில அளவை செய்தனர் என்பதை சுருக்கமாகக் கூறி விட்டு, பிரதான பாடத்திற்குள் நுழைந்தார்.  அப்பொழுது இந்தியாவை முதன்முதலில் நில அளவை செய்தவர் வில்லியம் லாம்டன் என்ற பன்முகத் திறமை கொண்டவர் என்று சொன்னார்.  அந்த “பன்முகத் திறமை“ என்ற வார்த்தை தந்த ஆர்வத்தில் இந்திய நில அளவை தொடர்பாக தமிழில் ஏதேனும் புத்தகங்கள் இருக்கிறதா என்று தேடியபொழுது கிடைத்த புத்தகம் தான் ரமணன் எழுதியுள்ள இந்த “கடைசிக் கோடு.

Sunday 19 February 2017

ஆஷ் அடிச்சுவட்டில்



தமிழின் தவிர்க்கமுடியாத வரலாற்றாய்வாளர்களில் மிக முக்கியமானவரான ஆ.இரா. வேங்கடாசலபதி, 13 ஆளுமைகளைப்பற்றி பல்வேறு கால கட்டங்களில் எழுதித் தொகுத்து வெளிவந்திருக்கும் புத்தகம் “ஆஷ் அடிச்சுவட்டில்”.  இதில் ஆஷ், எல்லிஸ், ஜி.யு. போப் மற்றும் எரிக் ஹாப்ஸ்பாம் தவிர மீதி அனைவரும் நம்மவர்கள்.  இந்நூலில் உள்ள ஜி.யு. போப் தொடர்பான கட்டுரையின் தலைப்பு “தமிழ் மாணவர்! என்று வியப்புக்குறியுடன் தொடங்குவதிலிருந்து நமக்கும் வியப்பு தொற்றிக் கொள்கிறது.  நான் இறந்த பிறகு, எனது கல்லறையில் “நான் ஒரு தமிழ் மாணவர்” என்று பொறிக்கப்பட வேண்டும் என ஜி.யு. போப் கூறியதாக ஒரு செய்தி நீண்ட காலமாக உலவி நிலைபெற்றுவிட்டது.  உண்மை என்னவெனில், லண்டனில் உள்ள ஜி.யு. போப்பின் கல்லறையில் அப்படிப்பட்ட வாசகம் ஏதும் பொறிக்கப்படவில்லை என்பதை நேரில் சென்று பார்த்ததுடன் அதன் நிழற்பட நகலையும் புத்தகத்தில் இடம்பெற செய்துள்ளார் சலபதி.  லண்டன் செல்லும் தமிழன்பர்கள் எவர் வேண்டுமானாலும் போப்பின் கல்லறையை நிழற்படம் எடுத்து இதை நிறுவலாம்.  ஆனால் சலபதி வித்தியாசப்படுவது எதிலென்றால், “நான் ஒரு தமிழ் மாணவர்என்ற சொற்றொடர் எவ்வாறு நிலைபெற்றது என்பதைத் தேடி கண்டடைந்ததில் தான் உள்ளது.  தமிழின் நீண்ட கால நம்பிக்கையைத் தகர்த்த முக்கியமான கட்டுரை.