Tuesday 13 March 2012

SILVER STREAK (1976) - ஓடும் இரயிலில் ஒரு த்ரில்லர்


ஜார்ஜ் கால்ட்வெல் (வைல்டர்) என்கிற புத்தக எடிட்டர் தன் தங்கையின் திருமணத்திற்காக லாஸ் ஏஞ்செல்சிலிருந்து சிகாகோவிற்கு சில்வர் ஸ்ட்ரீக் என்ற இரயிலில் புறப்படுகிறான்.  மொத்தம் இரண்டரை நாள் பயணம்.  முதல் நாள் பயணத்திலேயே இரயிலிலுள்ள பாரில் ஹில்லி (க்ளேபர்க்) என்ற பெண்ணைச் சந்திக்கிறான்.  ஹில்லி தான் ஸ்க்ரெய்னர் என்ற வரலாற்றாசிரியரின் உதவியாளர் என்றும் அவர் ரெம்ப்ரான்ட் என்ற புகழ்பெற்ற ஓவியரைப் பற்றி எழுதிய புதிய புத்தக வெளியீட்டிற்காக சிகாகோ செல்வதாகக் கூறுகிறாள்.  இருவருக்குமிடையே நடக்கும் தொடர் பேச்சு காதலில் முடிகிறது. ஸ்க்ரெய்னர், அதே இரயில் வேறு கம்பார்ட்மென்ட்டில் இருப்பதால், அன்றிரவு ஜார்ஜ் அவள் அறையில் தங்குகிறான்.  இருவரும் ரொமான்ஸ் மூடில் இருக்கும் பொழுது, ஜன்னல் வழியாக ஒரு வயதான மனிதர் தலையில் சுடப்பட்டன் ஹிலையில் இறந்து கீழே விழுவதை ஜார்ஜ் பார்க்கிறான்.  ஹில்லி அவனிடம், மறுநாள் காலை இரயில் நடத்துனரிடம் இதைபற்றி தெரிவிக்கலாம் என்கிறாள்.

Friday 9 March 2012

பேருந்துப் பயணம் - என்றும் கசப்பான அனுபவம்


நேற்று கோவைக்கு ஒரு வேலையாகச் சென்று விட்டு திருப்பூருக்குப் புறப்படும் பொழுது பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை.  ஆனால் கோவை நகருக்குள் அவினாசி சாலையில் ஒவ்வொரு நிறுத்தமாக நிற்க நிற்கக் கூட்டம் எகிற ஆரம்பித்தது.  நான் மூன்று சீட்டில் ஜன்னலோரத்திலிருந்து மூன்றாவது ஆளாக இடையில் உள்ள கம்பியோடு கம்பியாக ஒட்டி உட்கார்ந்து வந்தேன். ஏனெனில் என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருவருமே சற்று குண்டு.  நான் ஒல்லியாக இருந்ததால்தான் அங்கே உட்கார முடிந்தது. ஒவ்வொரு நிறுத்ததிலும் ஏறிய நபர்கள் இருக்கைகள் நிறைந்து விட்டால் பேருந்தின் இடையிலுள்ள கம்பியில் சாய்ந்து நிற்கவாவது இடம் கிடைக்குமா என எதிர்பார்ப்பது வழக்கம். அப்படி ஒருவர் நான் கையைச் சுற்றியுள்ள கம்பியில் சாய வந்தார். உடனே நான், அவரிடம் 'இடப் பற்றாக்குறையால் கம்பி மேல் கையை வைத்து உட்கார்ந்து வருகிறேன்... சற்று தள்ளி நில்லுங்கள்!' என்றேன். அவர் கடுப்பாகி, 'கூட்டத்தில் அப்படி தான் நிற்க முடியும்...! வேணும்னா கையை எடுத்துட்டு உட்காரு(ங்கள்)' என்றார். அடைப்புக்குறிக்குள் உள்ள 'ங்கள்' என் மனத் திருப்திக்காக நானாக சேர்த்துக் கொண்டது.  அவரைச் சொல்லிக் குற்றமில்லை!... பாவம் அவரே வேலை முடிந்து களைப்பாக வீட்டிற்க்குப் போய்க் கொண்டிருக்கிறார்.  எனது கோபமெல்லாம் நமது அரசு நிர்வாக அவலட்சணத்தின் மீதும் நமது அதீதமான மக்கள் தொகையின் மீதும் தான். சென்ற வருடம் டிசம்பர் மாதம் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூர் சென்று வந்தார். அவரிடம் சிங்கப்பூரைப் பற்றிப் பல்வேறு விசயங்களைப் பேசும் பொழுது பேருந்துப் பயணத்தைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார்... காலையில் மக்கள் வேலைக்குச் செல்லும் நேரங்களில் மட்டும் சிறிது நெரிசலாக இருக்கும்... மற்ற நேரங்களில் மேலே உள்ள படத்தில் இருப்பது போல் இருக்கும் என்றார் (பட உபயம் : கூகுள் இமேஜஸ்). நெரிசல் என்பது நம்மூரைப் போல் நானூறு பேர் அல்ல... நான்கைந்து பேர் நின்று கொண்டு வருவார்கள். அவ்வளவுதான்! 

இது எப்படி சிங்கப்பூரில் மட்டும் சாத்தியமாகிறது?. நமது பாரதப் 'புண்ணிய' பூமி ஏன் இப்படி இருக்கிறது என இணையத்தில் தேடினால் சில விவரங்கள் கிடைத்தன.  இனிவரும் வாசகங்களை 'ரமணா' விஜயகாந்த் பாணியில் படிக்கவும்! சிங்கப்பூரின் மொத்தப் பரப்பளவு வெறும் 710 ச.கி.மீ தான்.  மக்கள் தொகை 2011ம் ஆண்டு நிலவரப்படி தோராயமாக 51,82,000. அதாவது ஒரு ச.கி.மீட்டருக்கு 7300 பேர். இவ்வளவு நெருக்கடி நிறைந்த ஊரை அந்நாட்டு அரசாங்கம் எவ்வளவு அழகாக நிர்வகிக்கிறது.  நம் நாட்டில் ஒரு ச.கி.மீட்டருக்கு 364 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.  இதைத் திறமையாக நிர்வாகம் செய்ய முடியமா? முடியாதா...? பூமியில் நாம் அன்றாடம் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, கோடிக்கணக்கில் நமது வரிப்பணத்தைச் செலவு செய்து சந்திரனுக்குச் செயற்கைக் கோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசும் வரை... நாம் பேருந்தில் ஒருவர் மீது ஒருவர் உரசி நின்றபடியே பயணிப்போம்!. வேறு என்ன செய்ய?

Thursday 8 March 2012

பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்


இன்று உலக மகளிர் தினம். வ. கீதா மற்றும் கிறிஸ்டி சுபத்ரா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கும் இப்புத்தகத்தைப் படித்து வெகு நாட்களாகின்றன. இருந்தாலும் இன்று அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும்.  இப்புத்தகத்தின் மைய இழை, ஆண்களை வில்லனாகவும் பெண்களை ஒன்றும் தெரியாத அப்பாவிகளாகவும் சித்தரிப்பதாகும். அதில் ஒரு சில கருத்துகளில் சிறிது நியாயம் இருக்கலாம். அதிலும் பெரும்பான்மையான விசயங்கள் 19ம் நூற்றாண்டோடு முடிவடைந்துவிட்டன.

Wednesday 7 March 2012

FLY AWAY HOME (1996) - பரவச சினிமா


நியூசிலாந்தில் நடக்கும் ஒரு சாலை விபத்தில் சிறுமி ஏமியும் (அன்னா பகுய்ன்) அவள் தாயும் சிக்கிக் கொள்கிறார்கள். தாய் இறக்கிறாள். ஏமியை அவள் தந்தை தாமஸ் (ஜெஃப் டேனியல்ஸ்) தன் சொந்த நாடான கனடாவிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஏமியின் தந்தையுடன் அவரது தோழி சூசனும் இருக்கிறாள். ஆரம்பத்தில் ஏமிக்கு அவர்களோடு இருக்கப் பிடிக்கவில்லை. அவள் தந்தை வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் தனது சொந்தப் பட்டறையில் வேலை செய்கிறார். பட்டறை என்றால்... க்ளைடர் விமானகள், பெரிய சிலைகள் செய்யும் இடம். அவர்கள் வசிப்பது ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பண்ணை வீடு. பக்கத்திலேயே ஒரு குளமும் அதில் கனடா கூஸ் எனப்படும் காட்டு வாத்துகளும் இருக்கின்றன. அவை குளிர் காலத்தில் இனப்பெருக்கத்திற்காக கனடாவின் வடக்குப்பகுதியிலிருந்து தெற்குப்பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் வருகின்றன. ஒருநாள் அந்தக் குளம் இருக்குமிடத்தில் கட்டிட வேலைகளைத் தொடங்குவதற்காகப் புல்டோசருடன் வரும் ஆட்கள் மரங்களை வெட்டுகின்றனர். குளத்தில் விழும் மரங்களால் வாத்துகளின் வாழிடம் பாதிக்கப்படுகிறது. அவைகள் வேறு இடம் நோக்கிப் பறக்கின்றன.

Tuesday 6 March 2012

கோடுகளும் வார்த்தைகளும்


ஓவியம் வரையாவிட்டாலும் அதன் மீது எனக்கு ஓர் ஈடுபாடு உண்டு. அதன் விளைவாக பிரபல ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் மேற்கண்ட புத்தகத்தை வாங்கினேன். ஓவியத்திற்குப் பின்னால் இத்தனை தகவல்களா என வியக்க வைக்கும் புத்தகம். இது ஏதோ ஓவியங்களைப் பற்றிய புத்தகம் மட்டுமல்ல... மருதுவின் பால்ய கால நினைவுகள், திரைப்படக்கலையின் நுணுக்கங்கள், அனிமேசன், காமிக்ஸ் உலகம், 'நடிகவேள்' எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் மற்றும் விடுதலைப்புலிகளின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவரான மறைந்த தமிழ்ச்செல்வன் ஆகியோரைப்பற்றிய சுவையான புதிய தகவல்களும் உள்ளடக்கியது.

Monday 5 March 2012

THE MANCHURIAN CANDIDATE (1962) - அரசியல் சைக்கோ த்ரில்லர்


1952ல் நடந்த அமெரிக்க - கொரிய யுத்தத்தின் போது சிக்கிய அமெரிக்க வீரர்கள் சிலரை சீனாவின் மஞ்சுரியா என்ற இடத்திற்குக் கொண்டு சென்று ஹிப்னாடிசம் செய்து மீண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பி விடுகின்றனர். அவர்களில் ஒருவன் தான் ரேமண்ட் ஷா (லாரன்ஸ் ஹார்வி). அவன் சீட்டுக்கட்டில் உள்ள சிவப்பு ராணி (டயமண்ட் மட்டும்) சீட்டைப் பார்த்தால் ஹிப்னாடிச நிலைக்குச் சென்று விடுவான். அதன் பிறகு என்ன கட்டளையிட்டாலும் செய்து முடிப்பான். கொடுக்கப்பட்ட வேலை முடிந்தவுடன் சுய நினைவிற்கு வந்தாலும் அவன் மயக்க நிலையில் செய்த வேலைகள் ஞாபகத்திற்கு வராது. அவனை அமெரிக்காவில் இயக்கும் பொறுப்பு மிசஸ். செலின் (ஏஞ்சலா லேன்ஸ்பரி) என்ற கம்யூனிஸ்ட் பெண்ணிடம் கொடுக்கப்படுகிறது. அவள் வேறு யாருமல்ல ஷாவின் அம்மா தான். அவள் தன் இரண்டாவது கணவனான செலினை ஜனாதிபதியாக்கி விட்டால் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என திட்டமிடுகிறாள். அதற்குத் தன் மகனையே சதி வேலைகளில் ஈடுபடுத்துகிறாள்.

Sunday 4 March 2012

வடிவேலு - வைகைப் புயல் மீண்டும் வருமா?



நேற்று திருப்பூர் இரயில் நிலையத்தின் முகப்பில் மேற்கண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு நோட்டு, புத்தகங்கள் விற்கும் கடையின்  பென்சில் ஆஃபர் விளம்பரம். எத்தனையோ நடிகர்கள் இருக்க, தற்காலிகமாக தமிழ்த் திரையுலகம் மறந்து போன வடிவேலுவின் முகம் தான் அந்தப் பலகை வைத்தவருக்கு ஞாபகத்தில்  உள்ளது.  இதுதான் வடிவேலுவின் பலம்.

Friday 2 March 2012

திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்


முன் குறிப்பு : பாரதியை அதீதமாக நேசிப்பவர்கள் தயவுசெய்து மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

வாலாசா வல்லவன் என்ற செ. சேகர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை வாங்கி மூன்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தாலும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இந்நூலை உங்களுக்கு அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும்.

பாரதி என்றவுடன் நமது மனதில் தோன்றும் பிம்பம்... முறுக்கிய மீசை, கூர்விழிப் பார்வை, தேஜசான முகம், தைரியமான குணம் மற்றும் தன் சொந்த சாதியையே சாடும் முற்போக்குக் கவிதைகள் ஆகியவை. இதற்குக் காரணம் நமது ஊடகங்களில் நீண்ட காலமாக வெளியான பாரதியின் ஓவியங்கள், அவரின் கவிதைகள் மற்றும் திரைப்படங்களில் பாரதியாக நடித்த எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பு போன்றவைதான். இந்தப் பிம்பங்களை ஒவ்வொன்றாக வலுவான ஆதாரங்களுடன் தகர்த்தெறிகிறது இந்நூல்.

Thursday 1 March 2012

RED SUN (1971) - விறுவிறுப்பான கௌபாய் சினிமா


1870ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க ஒரு ஜப்பானியத் தூதரும் அவருக்குப் பாதுகாப்பாக நான்கு சாமுராய் வீரர்களும் ஒரு ரயிலில் வருகிறார்கள். அதே ரயிலில் பொற்காசு மூட்டைகளும் பலத்த பாதுகாப்போடு இணைக்கப்பட்டுள்ளன. அந்த ரயிலை லிங்க் (சார்லஸ் பிரான்சன்) மற்றும் காட்ச் (ஆலன் டெலான்) என்ற இரண்டு கொள்ளையர்கள் தங்கள் சகாக்களுடன் கொள்ளையடிக்கின்றனர். அப்பொழுது ஜனாதிபதிக்குப் பரிசளிப்பதற்காக ஜப்பானியத் தூதர் கொண்டு வந்திருக்கும் விலையுயர்ந்த தங்க வாளையும் பறித்துக் கொண்டு சாமுராய் வீரன் ஒருவனையும் கொல்கின்றனர். கொள்ளை முடிந்து கிளம்பும் காட்ச், லிங்கிற்குப் பங்கு தரக் கூடாது என்ற எண்ணத்தில் அவனைக் கொல்ல முயல்கிறான். லிங்க் தப்பித்து விழும் பொழுது மயக்கமடைகிறான். அவன் இறந்து விட்டதாக நினைக்கும் காட்ச் கொள்ளை முடிந்து தனது இடத்திற்க்குப் புறப்படுகிறான்.