கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தெங்குமரஹாடா செல்ல வேண்டுமென்று ஆசை. ஆனால் நிறைவேறவே இல்லை. முதல் காரணம் அங்கு ஜீப் போன்ற பெரிய வாகனங்கள் இருந்தால்தான் செல்ல முடியும். நமக்கு ஜாதகத்தில் நான்கு சக்கர வாகனப் ப்ராப்தி கிடையாது. பேருந்து வசதி இருக்கிறது. ஆனால் அது வரும் சரியான நேரம் தெரியாது. அங்கு தங்குவதற்கு விடுதிகளும் கிடையாது. ஒரே ஒரு வன இலாகா விடுதி மட்டும் உள்ளது. அதற்கு டி.எஃப்.ஓ விடம் அனுமதி பெற வேண்டும். இத்தனை இடர்ப்பாடுகளையும் கடந்து இப்பயணத்தைச் சாத்தியமாக்கியவர் அண்ணன் அம்சா. எனது நீண்ட கால நண்பர். இவர் பலமுறை அங்கு சென்றுள்ளார். இவர் கால் பதிக்காத இடமே அங்கு இல்லையென சொல்லுமளவிற்கு தெங்குமரஹாடாவுடன் நல்ல பரிச்சயமுள்ளவர். முதலில் எங்களோடு வேறு இரண்டு நண்பர்களும் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர்கள் வராததால் நாங்கள் இருவர் மட்டுமே புறப்பட்டோம்.