Thursday 19 April 2018

எழுத்தே வாழ்க்கை



எழுத்தை மட்டுமே நம்பி ஒருவர் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்பதற்கு நம்முன் உள்ள மிகச் சில எழுத்தாளர்களில் எஸ். ராமகிருஷ்ணனும் ஒருவர்.  அவர் பல்வேறு காலகட்டஙகளில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து எழுத்தே வாழ்க்கை என்ற இந்நூல் வெளிவந்துள்ளது.  இதில் அவரது எழுத்து மற்றும் பதிப்பு அனுபவங்களை சிறிதளவும், பயண அனுபவங்களை அதிகளவிலும் தொகுக்கப்பட்டுள்ளது.  பயணக் கட்டுரைகள் வறட்சியாக இல்லாமல் இலக்கியம், வரலாறு, சினிமா ஆகியவற்றைக் கலந்து சுவையாக எழுதியுள்ளார்.  இவை போக சினிமாத் துறை அனுபவங்கள்... அதுவும் இளையராஜா இசையில் ஒரு பாட்டு எழுதியுள்ள அனுபவம் அருமை!

சிறு பிராயத்திலேயே புத்தகங்களினூடே வளர்ந்ததால் தீராத புத்தக வெறியனாக... அவற்றுடனான தனது பயணங்களை  புத்தகங்களும் நானும் மற்றும் வாழ்வின் உன்னதங்கள் என்ற இரண்டு கட்டுரைகளில் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார்.  என்னடா...! ஒரு மனுஷன் இந்த சமூகம் கற்பிக்கும் எவ்வித வேலைக்கும் செல்லாமல் புத்தகங்கள், எழுத்து, சினிமா என வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறாரே...!! என எஸ்.ராவின் வாழ்க்கை நம்மைப் பொறாமைப்படுத்தும்.  ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வலிகளை ஒரு சில கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்.  குறிப்பாக அவரது காதல் துணைவியார் அளித்த ஆதரவு... லட்சத்தில் ஒரு பெண்மணிதான் இது போன்று இருக்க முடியும்.  ஆசிர்வதிக்கப்பட்டவர் எஸ்.ரா!

இவரது அமெரிக்க மற்றும் ஜப்பான் பயணக் கட்டுரைகள் விசா எடுக்காமலேயே நம்மை நயாகராவின் சாரலில் நனைத்தும் தோக்கியோவின் பனியில் உறைய வைக்கவும் செய்கின்றன.  அதிலும் அமெரிக்காவில் மார்க் ட்வைனின் வீட்டிற்குச் சென்றது, ஜப்பானில் ஹிரோஷிமாவிற்கு சென்றது ஆகியவை அற்புதமாக எழுதப்பட்டுள்ளன.

இதில் நினைவுகள் கசியும் கிணறு, கூட்ஸ் ரயிலில் ஒரு பயணம் ஆகிய கட்டுரைகள் நம் பால்ய காலத்தைக் கண் முன் நிறுத்துகின்றன.  எனது பார்வையில் இத்தொகுப்பின் முத்தாய்ப்பான உலகிற்கு உப்பாக இருங்கள் என்ற கட்டுரைக்காகவே இந்நூலை வாங்கலாம்.  அருமையான வாசிப்பு அனுபவம்!  Proof Reading-ல் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்!!

பக்கங்கள் 176
விலை   - ரூ.175/-
வெளியீடு தேசாந்திரி பதிப்பகம்.

No comments:

Post a Comment